search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கனூர் பிஷப் பலி"

    எர்ணாகுளத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து செங்கனூர் பிஷப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் செங்கனூர் மறை மாவட்ட ஆர்த்தடாக்ஸ் சிரியன் கத்தோலிக்க ஆலய பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ், (வயது 80).

    பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ் நேற்றிரவு செங்கனூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு ரெயிலில் புறப்பட்டார். இன்று அதிகாலை அவர் வந்த ரெயில் எர்ணாகுளம் சந்திப்பு ரெயில் நிலையத்தை நெருங்கியது.

    எனவே ரெயிலில் இருந்து இறங்க தயாரான பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ் தனது கைப்பையுடன் ரெயிலின் வாசல் அருகே வந்து நின்றார். அப்போது திடீரென ரெயில் பெட்டியின் கதவு அவர் மீது மோதியது.

    இதில் பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்ட அவர் தண்டவாளத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்ட சக பயணிகள் அலறினர். அவர்கள் ரெயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் விரைந்து வந்து பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ்சை மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ்சை வரவேற்க எர்ணாகுளம் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பாதிரியார்கள் மற்றும் சபை மக்கள் ஏராளமானோர் காத்திருந்தனர். அவர்கள் பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ் ரெயிலில் இருந்து விழுந்து பலியான தகவல் அறிந்து கதறி அழுதனர்.

    இறந்து போன பி‌ஷப் தாமஸ் மார் அத்னாசியஸ் உடல் இன்று பிரேத பரிசோதனை முடிந்து பி‌ஷப்பின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது.

    ×